search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோடை மழை"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது.
    • நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் நிலவி வரும் அதிக வெப்ப அலை காரணமாக தொழிலாளர்களின் உடல்நலம் பாதிப்படைவதை தடுக்கும் பொருட்டு, திறந்த வெளியில் மேற்கொள்ளப்படும் அனைத்து கட்டுமான பணிகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கொள்ளக்கூடாது என கட்டுமான நிறுவனங்களுக்கு சென்னை தொழிலக பாதுகாப்பு சுகாதார இயக்குனர் நேற்று அறிவுறுத்தி இருந்தார்.

    இந்நிலையில் தமிழகத்தில் கோடை மழை ஆங்காங்கே பெய்யத் தொடங்கி இருப்பதால், பல்வேறு இடங்களில் வெப்பம் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகும் இடங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. அந்தவகையில் நேற்றும் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    தமிழகத்தில் வெப்ப அலையின் தாக்கம் குறைந்துள்ளதால் வழக்கம்போல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கட்டுமான நிறுவனங்களுக்கு அறிவுரை வழங்கும்படி, இணை இயக்குனர்களுக்கு, தொழிலக பாதுகாப்பு இயக்குனர் அறிவுறுத்தி உள்ளார்.

    • சென்னையில் இந்த ஒன்றரை மாதத்தில் 3.3 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும்.
    • தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பற்றாக்குறை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் மார்ச் 1-ந்தேதி முதல் இன்று வரை பெய்ய வேண்டிய மழையின் அளவு 99 சதவீதம் குறைந்துள்ளது. சென்னையில் இந்த ஒன்றரை மாதத்தில் 3.3 செ.மீ. மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் வெறும் 2 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது.

    திண்டுக்கல்லை தவிர அனைத்து மாவட்டங்களிலும் மழை பற்றாக்குறை நிலவுகிறது. தமிழகத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருவதால் பற்றாக்குறை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
    • தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

    சென்னை:

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக தென் மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 13-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை பரவலாக மழை இருக்கும் என்று சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ளது.

    சென்னை வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கையை அளித்த போதும், வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடமும் தமிழக அரசும் தகுந்த முன்னேர்பாடுகள் செய்யாமல் பல்வேறு இடங்களில் அறுவடை செய்து விற்பனைக்கு வந்த நெல்மணிகளும் கொள்முதல் செய்த நெல்மணிகளும் உரிய பாதுகாப்பு இல்லாமல் மழையில் நனைந்து வீணாகியுள்ளது. இது தமிழக அரசின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகிறது.

    விவசாயத்திற்கு தேவையான தண்ணீர் கடைமடைகளுக்கு எளிதாக செல்லும் வகையில் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். அதோடு கோடை காலங்களில் ஏரி, குளங்களையும் தூர்வாரி தண்ணீரை சேமிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இயற்கை அளிக்கும் மழை தண்ணீரை சேமிக்கும் திட்டம் கர்மவீரார் காமராஜர் ஆட்சிக்குப்பிறகு எந்த ஆட்சியாளரும் செய்யவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    இனிமேலும் காலதாமதம் செய்யாமல் கோடைகாலம் முடிவதற்குள் மழைநீர் வடிகால் பணியையும், போக்குவரத்து சாலைகளை செப்பணிட்டும், இப்பணிகளை ஒருகாலக்கெடுவுக்குள் முடித்து மக்கள் பயடைய உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.
    • மாவட்டத்தில் பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. பிப்ரவரி மாதத்தில் இருந்தே வெப்ப அளவு உயர்ந்து வந்தது. சராசரியாக 104 டிகிரி முதல் 111 டிகிரி வரை வெயில் பதிவாகி வந்ததால் மக்கள் அவதி அடைந்து வந்தனர். இதனால் மழை பெய்யாதா என ஈரோடு மக்கள் ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடியில் கடந்த 2 நாட்களாக சூறாவளி காற்றுடன் ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. ஆனால் ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று முன்தினம் 10 நிமிடம் மட்டுமே மழை பெய்து ஏமாற்றியது. நேற்று காலை வழக்கும் போல் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. பகல் 11 மணிக்கு மேல் வானத்தில் கரு மேகங்கள் சூழ்ந்து இருந்தன.

    இதனையடுத்து பிற்பகல் 3 மணி அளவில் லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் நேரம் செல்ல சொல்ல சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரம் இடியுடன் கூடிய கனமழை போட்டி தீர்த்தது. இதனால் ஈரோடு மாநகர பகுதியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. கொங்காளம்மன் கோவில் வீதி, வீரப்பன்சத்திரம் போன்ற பகுதியில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது. பலத்த காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் மாநகர் பகுதி முழுவதும் 100-க்கும் மேற்பட்ட மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. சாலை நடுவில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.


    ஈரோடு முருகேசன் காலனி மற்றும் கணபதி காலனி பகுதியில் மரக்கிளைகளுடன் மின்கம்பங்களும் முறிந்து விழுந்ததால் அந்த பகுதியில் இரவு முழுவதும் மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதி அடைந்தனர். தற்போது அந்த பகுதியில் மின் ஊழியர்கள் மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு கோபி அடுத்த மொடச்சூர் பகுதியில் பலத்த மழையால் நூற்றுக்கும் மேற்பட்ட வாழைத்தோட்டத்தில் மழை நீர் தேங்கி நின்றது. கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் பகுதியில் 5 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த செவ்வாழை, கதலி, வாழை மரங்கள் கீழே சாய்ந்து சேதம் அடைந்தன. இதன் மதிப்பு ரூ.15 லட்சம் ஆகும்.

    இதேபோல் அந்தியூர் அருகே உள்ள காட்டூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்க தாக்கு பிடிக்க முடியாமல் 100-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்தன.

    தாளவாடி பகுதியில் நேற்று 3-வது நாளாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் ஓடைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதேப்போல் பவானிசாகர் அணை, வரட்டுப்பள்ளம் அணை பகுதியிலும் மழை பரவலாக பெய்தது. மாவட்டத்தில் பெய்த இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    எலந்த குட்டை மேடு-33.40, தாளவாடி-23.60, கோபி-23.20, பவானிசாகர்-13.20, ஈரோடு-14, வரட்டுப்பள்ளம்-8.20, சென்னிமலை-4.

    • மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த காற்று வீசியது.
    • மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 3-வது நாளாக நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் அக்னி வெயிலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, வின்சென்ட், பெரமனூர், 4 ரோடு, புதிய பஸ்நிலையம், பழைய பஸ் நிலையம், அம்மாப்பேட்டை, அஸ்தம்பட்டி உள்பட பல பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டியது. மழையை தொடர்ந்து மாநகரில் குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    ஆட்டையாம்பட்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று மதியம் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இந்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சேலம் சாலையில் வி.பி.எஸ். தியேட்டர் அருகே வேப்ப மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

    மின் வாரியத்தினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் வேரோடு சாய்ந்து கிடந்த வேப்பமரத்தை அறுத்து பொக்லைன் உதவியுடன் அகற்றி வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஏற்காட்டில் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய மழை இன்று அதிகாலை 2 மணி வரை சாரல் மழையாக பெய்தது. இதனால் ஏற்காட்டில் கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து கார் மற்றும் வாகனங்களில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காட்டிற்கு வருகிறார்கள். இதனால் ஏற்காட்டில் அண்ணா பூங்கா, மான் பூங்கா, படகு குழாம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன்கோவில், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், மீன் பண்ணை உள்பட அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏற்காட்டில் தற்போது கடும் குளிர் நிலவுவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் ரசித்து வருகிறார்கள்.

    ஏற்காட்டில் இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது. இதனால் கடும் குளிர்ச்சியுடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 26 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் 3.1, கரியகோவில் 3, சேலம் 3.1 என மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை மாவட்டத்தின் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது. மோகனூர் பகுதியில் நேற்று மாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை கன மழை பெய்தது. இதனால் சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியது. அதேபோல் ஆண்டகலுார் கேட், கவுண்டம்பாளையம், அத்தனுார் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை கன மழை பெய்தது. ராசிபுரத்தில் 30 நிமிடம் மழை பெய்தது.

    அதேபோல், பச்சுடையாம்பாளைம், பேளுக்குறிச்சி, மூலப்பள்ளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காற்று பலமாக அடித்ததால் சாரல் மழை மட்டுமே பெய்தது. மோகனூரில் 15 மிமீ, கொல்லிமலையில் 5 மிமீ, பரமத்திவேலூரில் 1 மிமீ என மாவட்டத்தில் 21 மிமீ மழை பெய்தது. இந்த மழையால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கோடை உழவுக்கு வசதியாக மழை பெய்துள்ளதால், இன்றிலிருந்து உழவு பணியை தொடங்க வாய்ப்புள்ளது.

    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • வீரபாண்டி 60, அரண்மனைபுதூர் 31.2, ஆண்டிபட்டி 10.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே தொடர் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. குறிப்பாக பெரியகுளம், வீரபாண்டி ஆகிய பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவானது.

    தொடர் மழை காரணமாக பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு நேற்று 100 கன அடி வந்த நிலையில் இன்று காலை 405 கன அடியாக அதிகரித்துள்ளது. 100 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 115.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு 1745 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 51.48 அடியாக உள்ளது. வரத்து 197 கன அடி. சிவகங்கை பூர்வீக பாசனத்திற்காக கடந்த 4 நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்படும் நிலையில் இன்று காலை 1572 கன அடிநீர் திறக்கப்படுகிறது. நீர் இருப்பு 2191 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 44 அடியாக உயர்ந்து முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீர்வரத்து 73 கன அடியாக உள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 103.81 அடியாக உள்ளது. வரத்து 40 கன அடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 65.76 மி.கன அடி.

    பெரும்பாலான அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கும்பக்கரை அருவியில் இன்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 2-வது நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 24.8, தேக்கடி 6, கூடலூர் 8.8, உத்தமபாளையம் 15, சண்முகநதி அணை 16.2, போடி 14, வைகை அணை 12, மஞ்சளாறு 15, சோத்துப்பாறை 11, பெரியகுளம் 60, வீரபாண்டி 60, அரண்மனைபுதூர் 31.2, ஆண்டிபட்டி 10.8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • பாட்டிலில் அடைத்து வைக்கப்படும் குடிநீரும் சிறிது நேரத்தில் வெந்நீராக மாறி விடுகிறது.
    • மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசல் வழங்கப்படுகிறது.

    சென்னை:

    சென்னையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கோடை மழை பெய்யாததால் உஷ்ணம் அதிகமாகி புழுக்கம் காணப்படுகிறது.

    வாட்டி வதைத்து வரும் வெயிலால் மக்கள் பெரும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக மோட்டார் வாகனங்களை ஓட்டுபவர்கள் வெப்பத்தின் தாக்கம் தாங்க முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள்.

    இதனால் மாநகர பஸ் டிரைவர்-கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். உப்பு கரைசல் வழங்கப்படுகிறது. என்ஜின் சூட்டோடு சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கமும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால் டிரைவர்- கண்டக்டர்கள் அதிகளவில் தண்ணீர் குடிக்கிறார்கள்.

    பாட்டிலில் அடைத்து வைக்கப்படும் குடிநீரும் சிறிது நேரத்தில் வெந்நீராக மாறி விடுகிறது. காலை 11 மணி முதல் மாலை 4, 5 மணி வரை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் டிரைவர்கள் சோர்வடைகின்றனர்.

    அடுத்த மாதம் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்பதால் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் டிரைவர்களுக்கு மின்விசிறி சிறப்பு ஏற்பாட்டை செய்துள்ளனர். சென்னையில் ஓடக்கூடிய 3 ஆயிரம் பஸ்களில் 5 ஆயிரம் டிரைவர், கண்டக்டர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் வெப்பத்தால் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மின் விசிறி பொருத்தப்பட்டு வருகிறது.

    டிரைவர் இருக்கையின் மேல் பகுதியில் மின் விசிறி பொருத்துவதன் மூலம் வெப்ப புழுக்கத்தில் இருந்து தற்காத்து கொள்ளலாம்.

    இது குறித்து அதிகாரிகள் கூறிம்போது:-

    வெப்பத்தின் தாக்குதலில் இருந்து பஸ் டிரைவர்களை பாதுகாக்கும் வகையில் முதல் கட்டமாக 1000 பஸ்களில் மின்விசிறி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு முதல் கட்டமாக

    250-க்கும் மேற்பட்ட பேருந்துகளில் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பஸ்களிலும் பொருத்தப்படும் என்றனர்.

    • தென் மாவட்டங்களில் நாளை முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது.
    • டெல்டா மாவட்டங்களிலும் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வறுத்து எடுத்து வருகிற நிலையில் மழையும் ஆங்காங்கே சில இடங்களில் பெய்து வருகிறது.

    தமிழக வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகமாக உள்ளது. ஈரோடு, கரூர், வேலூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    இந்த நிலையில் வளி மண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபடுவதால் தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும்.

    தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியதாவது:-

    தென் மாவட்டங்களில் நாளை முதல் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். மதுரை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, கொடைக்கானல் மலை மாவட்டங்களில் கன மழை பெய்யும்.

    குமரிக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உருவாகிறது. இதனால் டெல்டா மாவட்டங்களிலும் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

    சென்னையில் 15-ந்தேதி முதல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. 16,17 தேதிகளில் பலத்த மழை பெய்யும். திருவள்ளூர் மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும். கோடை மழை பல மாவட்டங்களில் பெய்ய தொடங்கி உள்ளதால், வெயிலின் தாக்கம் இயல்பான அளவை விட குறைவாக இருக்கும். உள் மாவட்டங்களில் வெப்ப நிலை சற்று அதிகமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் மாநகரில் 1 மணி நேரத்திற்கு மேல் கன மழை கொட்டியது.
    • இனி வரும் நாட்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நடப்பாண்டில் கோடை காலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதில் கடந்த 2-ந் தேதி அதிக பட்சமாக சேலத்தில் 108 டிகிரி வெயில் பதிவானது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்ததுடன் வெளியில் செல்ல முடியாமல் வீடுகளில் முடங்கினர்.

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. 2-வது நாளாக நேற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. மதியம் வரை வெயில் வாட்டிய நிலையில் பின்னர் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக காடையாம்பட்டி, ஏற்காடு, சேலம் மாநகர் உள்பட பல பகுதிகளில் நேற்று கன மழை கொட்டியது.

    ஏற்காட்டில் 1½ மணி நேரத்திற்கும் மேல் கொட்டிய கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில தண்ணீர் தேங்கியது. ஏற்காட்டில் பெய்த மழையால் இன்றும் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. இதனால் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டிற்கு சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். இதனால் கடைகளிலும் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர். ஏற்காட்டில் திடீரென பெய்த கன மழையால் ஏற்காட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சேலம் மாநகரில் நேற்று மதியம் 1 மணி நேரத்திற்கு மேல் கன மழை கொட்டியது. இதனால் கிச்சிப்பாளையம் நாராயண நகர், தாதகாப்பட்டி, அம்மாப்பேட்டை ஜெயா தியேட்டர், அஸ்தம்பட்டி, ஜங்சன், கொண்டலாம்பட்டி, 4 ரோடு, 5 ரோடு, பழைய மற்றும் புதிய பஸ் நிலையங்கள் , பெரமனூர் உள்பட பல சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    மேலும் பல பகுதிகளில் மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் குடியிருப்பு வாசிகள் தவித்தனர்.

    இதே போல தம்மம்பட்டி சுற்றுவட்டார பகுதிகளிலும் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக கன மழை கொட்டியது. இந்த மழை விவசாய பயிர்களுக்கும் உகந்ததாக இருக்கும் என்பதால் அந்த பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். மாவட்டத்தில் அதிக பட்சமாக தம்மம்பட்டியில் 23 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு 17.4, சேலம் 12.6 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 64 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    சேலம் மாவட்டத்தில் 2-வது நாளாக நேற்று பெய்த மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. கடந்த சில நாட்களாக வெப்பத்தில் தவித்த மக்கள் தற்போது ரம்மியமான சூழல் நிலவுவதால் நிம்மதியாக தூங்கினர். மேலும் இனி வரும் நாட்களிலும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
    • தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    * தமிழகத்தில் இன்று முதல் வரும் 16-ந்தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    * இன்று நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * நாளை தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    * நாளை மறுநாள் தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் குமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வரும் 15-ந்தேதி தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வரும் 16-ந்தேதி நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    வரும் 17, 18-ந்தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும்.

    அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • புண்ணிய நதி என போற்றப்பட்ட வைகை தண்ணீரின்றி வறண்டும் காணப்படுகிறது.
    • பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வைகை ஆற்றில் தண்ணீர் நிரந்தரமாக ஓட வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுவது வழக்கம். திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவர். தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இந்நிகழ்ச்சிக்காக வருடம் தோறும் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும். திருவிழா முடிந்த பின்னர் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்தப்படும்.

    இப்படி சிறப்பு வாய்ந்த வைகை ஆற்றை தூர்வாராமலும், சில சமூக விரோதிகள் ஆற்றில் உள்ள மணலை அள்ளிச் சென்றதாகவும் பல இடங்களில் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் வைகையில் நிரந்தரமாக தண்ணீர் ஓடினால் மாவட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. ஆனால் நாளடைவில் தண்ணீர் ஓடாமல் சாக்கடை கழிவுகள், வீடுகளில் இருக்கும் குப்பைகள் தான் வைகையில் மிதக்கிறது. புண்ணிய நதி என போற்றப்பட்ட வைகை தண்ணீரின்றி வறண்டும் காணப்படுகிறது.

    கடந்த சில வருடங்களுக்கு முன் வைகை வறண்ட நிலையில் அழகர் மலையானே தீயணைப்பு துறை உதவியால் தொட்டிக்குள் இறங்கி, ஆற்றில் இறங்கும் வைபவம் பல லட்சம் பக்தர்கள் முன்னிலையில் நடந்த வரலாறும் உண்டு. அதற்கு முன் திறந்து விடப்பட்ட வைகை நீர், வைகையில் மணல் இல்லாததால் மணல் அள்ளிய பள்ளத்தில் நீர் தேங்கி, மதுரைக்கு கூட வைகை நீர் வர முடியாத பரிதாபமான சூழல் நிலையும் இருந்தது. .

    வைகை ஆறு நீர்தாங்கிச் செல்லும் என்ற நிலை மாறி கொசுக்களை உற்பத்தி செய்யுமிடமாகவும், மனிதர்களின் கழிவுகளை கொட்டும் இடமாகவும் மாறி விட்டது. இறைச்சிக் கழிவுகள், சாக்கடை நீர் கலப்பதால் வைகை துர் நாற்றமுடன் நோய் பரப்பும் இடமாக காணப்படுகிறது. வைகை கரையோரம் முள் புதர் செடிகளும், ஆற்றுக்குள் நீரை அதிக அளவு உறிஞ்சும் கருவேல மரங்களும், மணல் அள்ளிய திருட்டு கும்பலிடம் தப்பித்த பகுதிகள் சிறு குன்று போலவும், மணல் அள்ளிய இடங்கள் அபாயகரமான பள்ளப்பகுதி என அறிவிக்கும் நிலையிலும் வைகை உள்ளது. கழிவு நீர் சாக்கடைகள் சங்கமிக்கும் வைகையை அழகர் ஆற்றில் இறங்கும் போது மட்டுமே கவனிக்கும் அரசு அதிகாரிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

    தற்போது ராமநாதபுரம் மாவட்டம் மக்களின் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளுக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் நேற்று மதுரையை வந்தடைந்தது. நேற்று மதியம் பெய்த கன மழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இன்று இரண்டாவது நாளாக வைகையின் இரு கரைகளையும் தொட்டு தண்ணீர் செல்கிறது. மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த வைகை ஆற்றில் தண்ணீர் நிரந்தரமாக ஓட வழிவகை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கடந்த சில நாட்களாக வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைத்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையால் தண்ணீர் வைகையாற்றில் கலந்து வீணாகிறது. தண்ணீரை தேக்கி வைக்க கூடுதல் தடுப்பணைகளை கட்டவும் பாரம்பரிய மிக்க வைகை ஆற்றில் நிரந்தரமாக தண்ணீர் போடவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெங்களூருவில் கோடை மழை தொடர்ந்து பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவுகிறது.
    • சிக்கமகளுரு, தட்சிண கன்னடா மற்றும் குடகு உள்பட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் கோடை வெயில் சுட்டெரித்தது. வரலாறு காணாத வெப்பத்தால் மக்கள் கடுமையாக அவதி அடைந்தனர். இந்த நிலையில் இம்மாதத்தின் தொடக்கத்தில் அதாவது கடந்த 2-ந் தேதி கோடை மழை பெய்ய தொடங்கியது. அன்றில் இருந்து சீரான இடைவெளியில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் நள்ளிரவு சுமார் 12 மணிக்கு நகரில் மழை பெய்யத்தொடங்கியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த மழை கொட்டி தீர்த்தது. மெஜஸ்டிக், ராஜாஜிநகர், விஜயநகர், மைசூரு ரோடு, ராஜராஜேஸ்வரி நகர், கெங்கேரி, பட்டனகெரே, ஞானபாரதி, அத்திக்குப்பே, நெலமங்களா, தாசரஹள்ளி, சர்வதேச விமான நிலைய ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

    இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் வெள்ள நீர் புகுந்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. கெங்கேரியில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையம் மழை வெள்ளத்தில் மூழ்கியது. அப்போது பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டுள்ள பெட்ரோல் டேங்கரில் மழைநீர் புகுந்தது. இதனால் அந்த டேங்கரில் இருந்த பெட்ரோலை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன் மதிப்பு லட்சக்கணக்கான ரூபாய் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

    அதேபோல் நெலமங்களா, சர்வதேச விமான நிலைய ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து பாதிப்புகளை ஏற்படுத்தியது. நள்ளிரவு நேரம் என்பதால் சாலைகளில் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்களே ஓடின. இதனால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படவில்லை. புறநகர் பகுதியான எசரகட்டாவில் 40 மில்லி மீட்டரும், பெங்களூரு நகரில் 20 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. மாண்டியாவில் உள்ள ஸ்ரீரங்கப்பட்டணாவில் காலை 9.30 மணி முதல் பெய்ய தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இங்கு அதிகபட்சமாக 9 செ.மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பெங்களூருவில் கோடை மழை தொடர்ந்து பெய்வதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த நிலை நிலவுகிறது. மாநிலம் முழுவதும் மேலும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 15-ந்தேதி வரை வானிலை ஆய்வு மையம் அனைத்து மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை மற்றும் கல்புரகி, விஜயபுரா, யாதகிரி, ஷிமோகா, உடுப்பி, சிக்கமகளுரு, தட்சிண கன்னடா மற்றும் குடகு உள்பட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷிமோகா, குடகு, ஹாசன் மற்றும் மைசூர் மாவட்டங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்ய கூடும் எனவும் பெங்களூருவில் மிதமான மழை பெய்ய வாய்யப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

    ×